மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட 9 கிராமங்களில் ரூ.30 கோடி மதிப்பில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தை நேஷனல் ருர்பன் மிஷன் (NRUM) திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து, மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தின் 9 கிராம ஊராட்சிகளையும் நகர பகுதிகளுக்கு இணையாக உயர்த்திடும் வகையில் பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-
இத்திட்டம் செயல்படுத்த கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைவராகவும் திட்ட இயக்குநரை துணை தலைவராகவும் பல்துறை அலுவலர்களை உறுப்பினர்களாக கொண்டும் மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான நேஷனல் ருர்பன் மிஷன் கூட்டத்தில் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகள் அவற்றின் நன்மைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு பின்னர் பணிகள் மேற்கொள்ள ரூ.30 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தின் மூலம் அனைத்து கிராம ஊராட்சிகளையும் வளர்ச்சியடைந்த நகர பகுதிகளுக்கு இணையான முன்னேற்றமடைந்த பகுதிகளாக மாற்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கருப்பையா, (பேரூராட்சிகள்) கணேஷ்ராம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.