விவசாயிகள் தமிழக அரசின் மண் வள அட்டையினைப் பெற்று விவசாயத் துறையில் அதிக வருமானம் ஈட்டலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
'மண் வள அட்டையின் மூலம் விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் வளத்தினை அறிந்து கொள்ளவும், மண்ணில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்பதை அறிந்து சீர்திருத்த முறைகளை மேற்கொள்ளவும் மண் வள அட்டை பெரிதும் உதவுகின்றது.
ரசாயன உர உபயோகத்தை குறைத்து அதிகளவில் பசுந்தாளுரம் மற்றும் நுண்ணுயிர் உரங்களை உபயோகிக்கவும் மண் வள அட்டையின் மூலம் பரிந்துரை செய்யப்படுகின்றது.இவ்வாறு தேவைக்கேற்ப அங்கக மற்றும் ரசாயன உரங்களை உபயோகிக்க வழிவகை செய்வதால் சாகுபடி செலவு குறைக்கப்படுவதுடன், அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்கள் மண்ணில் இடப்படுவது தவிர்க்கப்பட்டு மண் வளம் பாதுகாக்கப்படுகின்றது.
மண் வள அட்டை வழங்கும் திட்டமானது தமிழகத்தில் 2015- 2016-ம் ஆண்டு முதல் செயலாக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் புவியியல் விவரங்களுடன் கூடிய கட்ட அடிப்படையிலான மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அந்த ஆய்வின் அடிப்படையில் பயிருக்கேற்ற உரப் பரிந்துரையுடன் கூடிய மண் வள அட்டை அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகின்றது.
உரச்செலவை குறைத்து, உர விரயத்தை தவிர்த்து, விளை நிலங்களின் மண் வளத்தை பேணுவதில் பெரும் பங்காற்றும் இம்மண் வள அட்டையின் முக்கியத்துவத்தை உணர்ந்து விவசாயிகள் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் மண் வள அட்டையினை பெற்று, அதனை உபயோகித்து வேளாண்மையில் அதிக மகசூல் பெறலாம்" இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.