தேசிய அளவிலான பேரிடர் மேலாண்மை ஒருநாள் கருத்தரங்கம் கோவை ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் சிவில் தொழில்நுட்ப பிரிவும், தேசிய பேரிடர் மேலாண்மை வாரியமும் இணைந்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தென்மண்டல பேரிடர் மேலாண்மை வாரியத்தின் பயிற்சி அதிகாரி ஜி.ஆறுமுகம் பங்கேற்று பேரிடர், தற்காப்பு, மறுவாழ்வு குறித்தும், சுனாமி, வெள்ளப்பெருக்கு, தீவிபத்து உள்ளிட்ட காலங்களில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், ''பூமியின் சுழற்சியிலும், கால மாற்றத்தினாலும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன. மனித வாழ்வின் அத்தனை அம்சங்களையும் பாதிக்கும் இதனை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், இந்த பேரிடர்களை எதிர்கொள்ள நம்மை தயார்செய்துகொள்ள முடியும்.

இந்திய அரசு பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான குழுக்களை அமைத்துள்ளது. மேலும், இந்தக் குழு மக்களுக்கு பல்வேறு விதமான பயிற்சிகளையும் வழங்கும்'' என்றார்.
இதைத்தொடர்ந்து, பேரிடர் காலங்களில் பின்பற்றவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிகளும், செய்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அக்கல்லூரி முதல்வர் ஏ.ரமேஷ் நிகழ்ச்சியினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில், சிவில் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் ஐ.பத்மநாபன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.