டிசம்பர் மாதம் 19-ம் தேதியன்று புதுதில்லி, விஞ்ஞான் பவனில், இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மத்திய அமைச்சகம் கோவை மாநகராட்சிக்கு டிஜிட்டல் இந்தியா விருது வழங்கவுள்ளது என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மேலும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், ''டிஜிட்டல் இந்தியா என்னும் திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்திய சமூகத்தை டிஜிட்டல் வழி அதிகாரமளிக்கப்பட்டதாகவும் பொருளாதார அறிவுமிக்கதாகவும் உறுமாற்றும் நோக்கத்துடன் கூடிய இந்திய அரசின் ஒரு முதன்மையான திட்டமாகும்.
இந்தத் திட்டத்தின் மூலம் அரசின் சேவைகளை மின்மயமாக்கி, மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாக அனைத்து இடங்களுக்கும் அதிவேக இணைய வசதி அளிக்கப்படும் திட்டத்தின் நோக்கங்களான மின்மயமான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல், மின்மயத்திலான சேவைகளை வழங்கல், கணினிப் பயன்பாட்டுக்கான கல்வியறிவைப் புகட்டல் ஆகிய திட்டத்திற்காக வழங்கப்படுகிறது.
வருகின்ற டிசம்பர் மாதம் 19-ம் தேதியன்று புதுதில்லி, விஞ்ஞான் பவனில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மத்திய இணை அமைச்சர் பி.பி.சௌதிரி ஆகியோர் இணைந்து கோவை மாநகராட்சிக்கு டிஜிட்டல் இந்தியா வெள்ளி விருது வழங்கவுள்ளார்கள்'.
கோவை மாநகராட்சியின் சார்பாக மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் டிஜிட்டல் இந்தியாவிற்கான வெள்ளி விருதை பெற்றுக்கொள்வார்.
இந்த விருதானது இந்திய அரசாங்கத்தின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆண்டுதோறும் டிஜிட்டல் இந்தியா என்னும் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருது கோவை மாநகராட்சிக்கு வழங்கப்படவுள்ளது. கோவை மாநகராட்சி மிக புதுமையான குடிமக்கள் ஈடுபாடு திட்டத்திற்காகவும் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் இலவச ஒய்-பை (WIFI) திட்டத்தை சிறப்பாக செயலாற்றியதற்காக டிஜிட்டல் இந்தியா வெள்ளி விருது வழங்கப்படவுள்ளது.