நிதி அமைச்சகம் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பண பிரச்சனைகளுக்கு காரணம் என பா.ஜ.க வின் மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க வின் மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்பது குறித்து அந்த கட்சியின்பொதுக்குழுதான் முடிவு செய்யவேண்டும் எனவும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறுபவர்கள் அதற்கான ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும், தற்போது நாட்டில் நிலவிவரும் பணப்பிரச்சனைக்கு நிதி அமைச்சகம் எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் இதை அணுகியதுதான் காரணம் எனவும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வழக்கத்துக்கு மாறாக சிறியதாக இருப்பதால் அவற்றை ஏடிஎம் மையங்கள் மூலம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சுப்பிபிரமணியசுவாமி அப்போது தெரிவித்தார்.
மேலும், தன்னுடைய தலைமையில் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற விவகாரம் தொடர்பான கூட்டம் நடந்த போது தான் 4 விதமான ஆலோசனைகளை மத்திய அரசுக்கு வழங்கியதாகவும், அவை கடைபிடிக்கபடவில்லை என குற்றம்சாட்டிய அவர் இந்த திட்டம் அறிவிக்கப்படும் முன்னரே இதுகுறித்து வெளியில் கசிய விட்டவர்கள் மீது வழக்குப்பதியக் கோரி மூன்று முறை மத்திய அரசிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பொது அவர் தெரிவித்தார்.