கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா ஞாயிறன்று மாவட்ட வருவாய் அலுவலர் தா.கிருஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் 5 நபர்களுக்கு அண்ணா விருதும், 9 நபர்களுக்கு பெரியார் விருதும் உள்ளிட்ட 3955 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், மாநில சிறுபான்மையினர் உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பா 18-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், புத்த மதத்தினர், பாரசீகர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகியோரின் உரிமைகளை பாதுகாக்கவும் மற்றும் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்களை வழங்கி அவர்களை முன்னேற்றவும், நலத்திட்டங்களை பெறுவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், சிறுபான்மையினரின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை தெரிந்துகொண்டு அரசுக்கு தெரியப்படுத்துவதுமே இவ்விழாவின் நோக்கமாகும்.
கோவை மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இத்துறைகளின் மூலம் கடந்த 2016- 17 ஆம் ஆண்டில் 1ம் வகுப்பு முதல் ஆராய்ச்சிபடிப்பு வரை மாணவ மாணவியர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் அவர்களது கல்வி நிறுவனத்தின் வாயிலாக இதுவரை 4004 விண்ணப்பங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், சிறுபான்மையினர் தொழில் முன்னேற்றம் அடைவதற்கு ஏதுவாக தனிநபர் கடன் ரூ.48 லட்சமும், கல்விக்கடன் ரூ.12 லட்சமும், நுண்கடன் ரூ.2 கோடியே நாற்பது லட்சமும் என மொத்தம் ரூ.3 கோடி டாம்கோ மூலம் மதிப்பிலான கடனுதவிகள் இந்த நிதியாண்டில் நிதியொதுக்கி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மொழியை முதன்மைப் பாடமாக கொண்டு பயின்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மற்றும் இரண்டாவது மாணவர்களுக்கு பேரறிஞர் அண்ணா விருதுடன், பாராட்டுச்சான்றிதழ் மற்றும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் 5 மாணவ மாணவியர்களுக்கும், தந்தை பெரியார் விருதுடன் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் 9 மாணவ மாணவியர்களுக்கும், 10ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ மாணவியர்களுக்கு பொதுப்பரிசாக ரூ.28 ஆயிரம் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் 2131 பெண் குழந்தைகளுக்கு ரூ.11 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் ஊக்கத்தொகையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அரசு விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் 1771 மாணவ மாணவியர்களுக்கு ரூ.53,130 மதிப்பிலும், 9 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளும், 14 நபர்களுக்கு உலா உறுப்பினர் அட்டை என மொத்தம் 3955 பயனாளிகளுக்கு ரூ.13,79,130 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இன்றைய தினவிழாவில் பயினாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த நலத்திட்ட உதவிகளை அனைவரும் பெற்று வாழ்வில் வளம் பெற வேண்டும்'' என மாவட்ட வருவாய் அலுவலர் தா.கிருஸ்துராஜ் தெரிவித்தார்.
இந்நிகழச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் சின்னசாமி உள்ளிட்ட சிறுபான்மையின மதத்தலைவர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.