கோவையில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்யும் மருந்துக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படுமென மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் தமிழ்மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் தமிழ்மணி கூறுகையில்,
மருந்தங்கள் மற்றும் மருந்து கடைகளில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் எந்த மருந்துகளையும் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
குறிப்பாக வலி நிவாரணி மற்றும் வலி நீக்க மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது எனவும், வலி நீக்க மருந்துகளை மருத்துவர்களின் கண்காணிப்பு இல்லாமல் உட்கொள்வதால் சிறுநீரகம் மற்றும் ஈரல் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.
மேலும், இந்த விதிமுறையை கடுமையாக அமல்படுத்தும் வகையில் ஒரு உதவி இயக்குநர் மற்றும் 6 மருந்து ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், மாவட்டம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மருந்துகள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் பெட்டிக்கடைகள் மீது காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாகவும், போதியளவு மருந்துகள் கையிருப்பு இருப்பதாகவும் கூறிய அவர், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.