ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சட்டம் சாதகமாக இல்லாதபோது தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதை தவிர வேறு வழியில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஓருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் செயலாளர் கார்மேகத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவர்,விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஜல்லிகட்டு விவகாரத்தில் பா.ஜ.கவை சேர்ந்த தமிழ்நாட்டு தலைவர்கள் கருத்தும் மத்திய தலைமையின் கருத்தும் வெவ்வேறு மாதிரியாக இருப்பதாக குற்றம்சாட்டினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் ஒரு மாதிரியாகவும் ஜல்லி கட்டு விவகாரத்தில் ஒரு மாதிரியாகவும் சட்ட நுணுக்கங்களை மத்திய அரசு கையாள்வதாக குற்றம்சாட்டிய சீமான், சட்டம் சாதகமாக இல்லாத போது தடையை மீறி ஜல்லிகட்டு போட்டியை நடத்துவதை தவிர வேறுவழியில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட மருத்துவம் தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டும் எனவும் இது தொடர்பாக கேள்விகள் எழுப்பியும் பதில் கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். அ.தி.மு.க பொது செயலாளராக சசிகலா வருவதை யாரும் தடுக்க முடியாது எனவும் அது அவர்கள் கட்சி சம்பந்தப்பட்ட விஷயம் எனவும் கூறியதுடன் புதுச்சேரி முதல்வர் தேர்வு செய்யப்பட்டதை போல தமிழக முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் இதில் மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பது 2021 தேர்தலில் தான் தெரியவரும் எனவும் தெரிவித்தார்.
இதேபோல் பழைய 500 ,1000 ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் முறையற்ற நிர்வாகம் காரணமாக பொது மக்கள் கடும் அவதிபடுவதாகவும, 2000 ரூபாய் நோட்டின் அவசியம் இப்போது எதற்கு எனவும் 2000 நோட்டில் சமஸ்கிருதத்தையும் காவி கொடியையும் சேர்த்ததை தவிர வேறு எதுவும் இல்லை எனவும் சீமான் தெரிவித்தார்.
வர்தா புயல் பாதிப்புகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் வெளிமாவட்டங்களில் இருந்து பணியாளர்களை மீட்பு பணிகளுக்கு கொண்டு வர வேண்டும் அவசியம் என்ன என கேள்வி எழுப்பிய அவர், இதன் மூலம் தமிழக அரசின் உள்கட்டமைப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.