இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு, தமிழ்நாடு ஸ்டேட் கவுன்சில் இணைந்து ''டான்கேர்'' என்ற ஒரு நாள் மருத்துவ கருத்தரங்கை முதல் முறையாக கோவையில் நடத்தியது.

கோவை ரெசிடன்சி டவர்ஸ்சில் நடைபெற்ற இந்த ஒருநாள் கருத்தரங்கில் தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவத் தலமாக கோவையை மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அரசு கொள்கை உருவாக்குவோர், ஒழுங்குமுறை அலுவலர்கள், தொழில்துறையினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, கோவையின் மருத்துவ துறை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் குறித்து முக்கிய தொடர் விவாதங்கள் நடைபெற்றன. தரமான மருத்துவம், தொழில்நுட்ப மேம்பாடு போன்றவைகளில் கோவை முன்னணியில் உள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதில், தமிழ்நாடு அரசின் குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறை முதன்மை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் துவக்க உரையாற்றினார். கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கவுரவ விருந்தினரான பங்கேற்றார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் கன்வீனர் தமிழ்நாடு ஸ்டேட் கவுன்சில் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி.எஸ்.கே.வேலு, ஜெம் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவ மைய தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய இந்திய தொழில் கூட்டமைப்பு கன்வீனர், தமிழ்நாடு ஸ்டேட் கவுன்சில் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி.எஸ்.கே.வேலு, ''கோவை நகரில் மருத்துவ துறையானது அரசு உதவினால் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ரூ.750 கோடியில் இருந்து ரூ.5 ஆயிரம் கோடியாக உயரும். கோவையின் தற்போதைய மருத்துவமானது சர்வதேச தரத்துக்கு இணையாக இருப்பதோடு, அமெரிக்கா மற்றும் இந்திய நகரங்களின் கட்டணத்தை காட்டிலும் மிகவும் குறைவாக உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
எனவே, டேன்கேர் கருத்தரங்கானது ஒத்தமனங்களை ஒருங்கிணைத்து புதிய சிந்தனைகளுக்கு ஊக்கமளித்து, நகரின் மருத்துவ வளர்ச்சிக்கு உதவும்'' என்றார்.