கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு மாதமாதம் முறையாக ஊதியம் வழங்க வேண்டும். மேலும், அந்த ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். கோவை வடக்கு மற்றும் தெற்கு தாலுகா அலுவலகங்களில் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் அலுவலர்கள் காலதாமதப்படுத்தி வருகின்றனர். உடனடியாக புதிய குடும்ப அட்டை வழங்க வேண்டும்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கல்விக் கடன் வழங்குவதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு கல்விக் கடன் வழங்காமல் வேண்டுமென்றே அலைக்கழித்து வரும் வங்கி அதிகாரிகளின் அத்துமீறல் செயலைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த நவம்பர் 8ம் தேதியன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 500, 1000 ரூபாய் நோட்டு தடையால் ஏழை நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக மத்திய அரசைக் கண்டித்தும் கோவை மாவட்ட தலித்சேனா சார்பாக செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் பிரிவு கோவை மாவட்ட தலைவர் வி.புஸ்பானந்தம் தலைமை வகிக்க வழக்கறிஞர் ஜி.சிவலிங்கம் வரவேற்புரையாற்றினார்.
அன்னை தெரசா அறக்கட்டளை மாநில தலைவர் மற்றும் நிறுவனர் முருகேசன் பெஞ்சமீன் முன்னிலை வகித்தார். அம்பேத்கர் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் நலச்சங்கம் தலைவர் தலீத் சு.ஜெயராஜ் கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலித்சேனா மாநில துணைத் தலைவர் சி.நொய்யல்சாமி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உதவியாளர் (எளியோர் வரியோர் மனித உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்) ஹே.பொதுவுடைமை கோவிந்தராஜ், சமூக ஆர்வலர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.