கோவை, சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவர்கள் சங்கம் சார்பில் 'அங்காடி 2016' என்ற இரண்டு நாள் சந்தைப்படுத்துதல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் இன்று துவங்கியது. இக்கண்காட்சியினை ஸ்வர்கா பவுண்டேஷன் நிறுவனர் சொர்ணலதா தொடக்கி வைத்தார்.

இது குறித்து மாணவர் சங்கம் ஒருங்கிணைப்பாளர் சங்கீதா கூறுகையில், குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் மூன்றாவது முறையாக இந்த வருடமும் வணிகவியல் துறை சார்பில் 'அங்காடி' என்னும் தலைப்பில் சந்தைப்படுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சி வணிகவியல் துறை மாணவர்களுக்காக நடைபெறுகிறது. மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தில் வணிகத்துறையில் சிறந்து விளங்கவும், முன்னோடியாக திகளவும் இது போன்ற நிகழ்வுகள் உதவியாக இருக்கும். இரண்டுநாள் நடைபெறும் இந்நிகழ்வில் மாணவர்களுக்கு தொழில் துறையில் பல்வேறு வகையில் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட அரங்குகளும், 180 மாணவர்களும் கலந்து இந்நிகழ்வை நடத்துகின்றனர்'' என கூறினார்.

இதில், குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் குமார், இயக்குநர் விஜிலா கென்னெடி மற்றும் வணிகவியல் துறை மாணவர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக ஐந்து அரங்குகளில் தன்னார்வ அமைப்புகளான பசுமை கோவை சார்பில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.