கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் மற்றும் கோவையை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களிடம் மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து டெங்குவால் பாதிக்கப்பட்ட மூவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும், இதுகுறித்து தெரிவித்த இருப்பிட மருத்துவர் சவுந்தரவேல், தற்போது வழங்கப்பட்டு வரும் சிகிச்சை காரணமாக மூவருக்கும் உடல்நிலை தேறிவருவதாகவும், டெங்கு காய்ச்சலுக்கான மருந்துகள், இரத்ததட்டுகள் போன்றவை போதுமான அளவில் உள்ளதாகவும் கூறினார்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறிய அவர், பொதுமக்கள் தங்களுடைய சுற்றுப்புறத்தை நீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.