வரலாறு என்பது வெறும் கதையாக இருப்பதில்லை. அது ஒரு இனத்தின் வாழ்வியல், பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட பலவற்றை நமக்கு தெரிவிப்பதுவே வரலாறு. வரலாற்றை மறக்கும்போதும், அதை தெரிந்து கொள்ளாத போதும் ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகி விடுகிறது.
தமிழக மக்களின் வாழ்கை வரலாறு, அவர்களின் வழக்கை முறை, நாகரீகம் மற்றும் அயல் நாடினருடன் நம் முன்னோர்கள் செய்த வாணிபம் இவைகளை அனைவரும் அறியும் விதமாக பழங்கால நாணயங்கள், அவர்கள் உபயோகித்த பொருட்கள் போன்றவற்றை சேகரித்து வருகிறார் கோவை வேடபட்டியை சேர்ந்த சாம்சன் என்பவர். சிறு வயதிலிருந்தே நினைவுச் சின்னங்களை சேகரிக்கும் பழக்கம் தொற்றிக்கொள்ள இது வரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால நாணயங்களை சேமித்துள்ளதாக கூறுகிறார் இவர்.
தனது தேடல் நிறைந்த வாழ்கை குறித்தும், பண்டைய கால நாணயங்களின் வரலாறு குறித்தும் சாம்சன் நம்மிடம் கூறியதாவது :-
திருப்பூர் மாவட்டம் தான் எனது சொந்த ஊர். எனது தாத்தா சேமித்து வைத்திருந்த சோழர் கால மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பண்டைய நாணயங்கள் எனது 10 வயதில் கிடைத்தது. பழைய நாணயங்களை முதல் முறையாக பார்த்த போது வியப்பாக இருந்தது. அந்த வியப்பு ஏற்படுத்திய தாகம் தான் இன்று பல நாணயங்களை என்னிடம் சேர்த்துள்ளது.வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்ற நான் நாணயங்கள் மற்றும் இரத்தின கற்கள் மீது கொண்ட ஈர்ப்பால் அதனை கடந்த 25 வருடங்களாக சேமித்து வருகின்றேன். தற்போது என்னிடம் சுமார் 2 ஆயிரம் வகையான நாணயங்களும் 300 க்கும் மேற்பட்ட இரத்தின கற்களும் உள்ளன.

வரலாறு
வரலாற்றை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் வரலாறு என்பது ஒரு படித்துறை. உதாரணமாக, நெப்போலியன் ரஷ்யா மீது படையெடுத்த போது அங்கு குளிர் காலம். அவர் அங்குள்ள பனிமலைகளை குறைத்து எடைபோட்டதன் விளைவு, படைவீரர்கள் குளிரால் உறைந்து மரணித்தனர். இதை தொடர்ந்து, 200 வருடங்களுக்கு பிறகு ஹிட்லர் அதே தவறை தான் செய்தார். வரலாற்றை தெரிந்து கொள்ளாததன் விளைவு தான் இது.
இவ்வாறாக வரலாறு என்பது, ஒவ்வொரு விதத்திலும் நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.
நாணயங்கள்
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நம் முன்னோர்கள் நாணயங்களை பயன்படுத்தியுள்ளனர். காங்கேயத்தை அடுத்த கொடுமனலி என்ற இடத்தில் இன்றும் கிடைக்கும் தொல்லியல் எச்சங்களும், நம்மிடம் உள்ள நாணயங்களும் அதற்கு சாட்சி. கோவையில் தொண்டாமுத்தூர் தொடங்கி, பேரூர், உட்பட நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் நம் வரலாறு உலகின் மிக தொன்மையானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பல சான்றுகள் கிடைத்துள்ளன.

உலகின் மிகப் பழமையான நாணயம் தமிழர்கள் நாணயங்கள் தான். சேரர், சோழர் , பாண்டியர், பல்லவர் மற்றும் மலையமான் காலத்தில் உபயோகிக்கப்பட்ட பல்வேறு நாணயங்கள் சதுரம், நீள் சதுரம் ஆகிய வடிவங்களில் உள்ளது. இவை செப்புக்களால் செய்யப்பட்டவை. இதை தொடர்ந்து கடந்த 1600 ஆண்டுகளுக்கு முன் ராஜ ராஜ சோழர் காலத்தில் வெள்ளியில் முத்திரையோடும், செம்பிலும் நாணயங்கள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து உருவான பல்வேறு சமஸ்தான நாணயங்கள் பலவற்றில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

மொழி மற்றும் மத நல்லிணக்கம்
கடந்த 1803-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் மொழி நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 4 மொழிகள் பொறிக்கப்பட்ட நாணயங்கள் வெளியிடப்பட்டன. இந்த நாணயங்கள் அன்றைய மதராஸ் மாகாணத்திற்கு உடபட்டவையாக இருந்தது. மேலும், ஆற்காடு நவாப் காலத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ‘முருகன் துணை’ என்று தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியிடப்பட்டது. அதாவது, ஒரு முசுலீம் ஆட்சிக்காலத்தில் இந்த நாணயம் வெளியான நிகழ்வு மத நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்டிருந்தது.
வகுப்புகள்
நமது வரலாற்றையும், அது கூறும் சிறப்புகளையும் நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வகுப்புகள் எடுத்து வருகிறேன். இது வரை 60 க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வகுப்புகள் நடத்தியுள்ளேன்.
நான் சேகரித்த இந்த நாணயங்களையும் வரலாற்று சின்னங்களையும் கொண்டு விரைவில் நாணய கண்காட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளேன். ஆதரவுகள் கிடக்கும் நேரத்தில் மிக விரைவில் கண்காட்சியை தொடங்குவேன். இது குறித்த விவரங்களுக்கு பொது மக்கள் எண்ணை தொடர்புகொள்ளலாம். ( 9841232300 )
இவ்வாறு அவர் கூறினார்.
தெரியுமா?
ரோமானியர்கள், போர்ச்சுக்கீசியர்கள் மற்றும் சீனர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கொங்கு மண்டலம் வந்ததும், அவர்கள் நம் ஊரில் இருந்து கொண்டு சென்றவைகள் குறித்தும் அடுத்த பதிவில் காண்போம்.
