கோவை காந்திபுரம் ஒன்றாவது வீதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (83). அதே பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பழனியம்மாள் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது கையில் இருந்த 2 சவரன் தங்க நகை காணாமல் போயுள்ளதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதைத்தொடர்ந்து, அவரது பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. பின், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சமீர்கான் (24) என்பவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், இன்று (வியாழன்) சமீர்கான் காந்திபுரம் வடகோவை மேம்பாலத்தின் அருகே நடந்துகொண்டிருந்த போது அவரை காவல் துறையினர் பிடிக்க முயற்சித்துள்ளனர். இதையறிந்த அவர் தப்பியோட முயன்று மேம்பாலத்தின் மேல் இருந்து குதித்துள்ளார். இதில், அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டதைத்தொடர்ந்து அவரை பிடித்த காவல் துறையினர் கைது செய்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின் அவரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சலாம் என்பவரது மகன் சமீர்கான் என்பதும், கேரளாவில் ஒரு உணவு விடுதியில் பணியாற்றி வந்ததும், கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கோவை வந்தது தெரியவந்துள்ளது.
