கோவையில் குடியிருப்புகளுக்கு அருகே கழிவுகளை கொட்டிய லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கோவையை அடுத்த வாளையாறு - நீலம்பூர் புறவழிச்சாலையில் கழிவுகளை ஏற்றி வந்த லாரியில் இருந்து, வட மாநில இளைஞர்கள் மூட்டைகளில் இருந்த கழிவுகளை பல்வேறு பகுதிகளில் கொட்டி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வெள்ளலூர் இடையர்பாளையம் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே மூட்டைகளை தூக்கி வீசியதை பார்த்த பொதுமக்கள், கழிவுகளை கொட்டிய லாரி மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட 7 பேரை சிறைபிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போத்தனூர் காவல் துறையினரிடம் லாரியையும், லாரியில் இருந்தவர்களையும் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், கோவை வின்செண்ட் சாலையை சேர்ந்த லாரி உரிமையாளரும், ஓட்டுநருமான சையத் அபுதாகீர் மற்றும் 6 வட மாநில இளைஞர்களை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கழிவுகள் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டதா அல்லது வேறு எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தமிழக- கேரள எல்லையோர கிராமங்கள், நீலம்பூர் புறவழிச்சாலை பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலும், கழிவுகளை கொட்டும் லாரிகளுக்கு அபராதம் பெற்றுக்கொண்டு விடுவித்து விடுவதாகவும், கழிவுகளை கொட்டும் லாரிகளை பறிமுதல் செய்து அரசுடமையாக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். கழிவுகள் கொட்டும் லாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் காவல் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினரிடம் குழப்பம் நீடிப்பதாக கூறிய கிராம மக்கள், கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் கொண்ட குழுக்களை அமைத்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.