கோவை அருகே விவசாய தோட்டத்திற்குள் நுழைந்த 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் நுழைந்து சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான பயிர்களை சேதப்படுத்தியது விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முத்துச்சாமி. இவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் நேற்று நள்ளிரவில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் நுழைந்து அங்கிருந்த 100-க்கும் மேற்பட்ட வாழைமரங்கள், 30 பாக்கு மரங்கள், மிளகாய் செடி மற்றும் மின்வேலி, சொட்டு நீர் பாசன குழாய்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியுள்ளது.
இதைத்தொடரந்து, யானைகளை விவசாயிகள் சேர்ந்து விரட்டியதை அடுத்து, பக்கத்தில் இருந்த தோட்டங்களுக்குள் சென்றும் யானைகள் சேதங்களை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் அன்றாடம் யானைகள் தொல்லை இருந்து வருவதால் விவசாயம் செய்ய முடியாத நிலை இருப்பதாகவும், யானைகளை விரட்ட வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் யாரும் வரவில்லை எனவும் விவசாயி முத்துச்சாமி புகார் தெரிவித்தார்.
மேலும், தனது தோட்டத்தில் சுமார் 4 லட்ச ரூபாய் அளவிற்கு யானைகள் கூட்டம் சேதங்களை ஏற்படுத்தி இருப்பதாக கூறிய அவர், யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், பயிர்களை பாதுகாக்க விடிய, விடிய யானைகளை விரட்ட வேண்டிய நிலை இருப்பதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர். 20-க்கும் மேற்பட்ட யானைக்கூட்டம் தோட்டங்களை சேதப்படுத்தி இருப்பது, அக்கிராம மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.