முன்னாள் தி.மு.க அமைச்சர் பழனிமாணிக்கம் தன்னிடமிருந்து 25 லட்சரூபாய் லஞ்சமாக பெற்ற விவகாரம் தொடர்பாக கேரள குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கோவையில் சரிதாநாயர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கோவை வடவள்ளி பகுதியில் காற்றாலை அமைத்து தரும் நிறுவனம் நடத்தி அதன் மூலமாக சரிதாநாயர் அவரது முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் ரவி ஆகியோர் காற்றாலை அமைத்து தருவதாக கூறி ரூபாய் 28 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 2009-ஆம் ஆண்டு மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கின் விசாரணை கோவை ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத்தில் இன்று சரிதா நாயர் ஆஜரானார். அப்போது, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 10-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரிதாநாயர், முன்னாள் தி.மு.க அமைச்சர் பழனி மாணிக்கம் தன்னிடம் 25 லட்ச ரூபாய் லஞ்சமாக பெற்ற விவகாரம் குறித்து தற்போது கேரள குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், கேரள சோலார் பேனல் மோசடி வழக்கில் லஞ்சம் பெற்ற உமன்சாண்டி உள்ளிட்ட சில கேரள அமைச்சர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் சரிதாநாயர் அப்போது தெரிவித்தார்.