டெல்லியில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த கென்ய இளைஞரிடமிருந்து 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்து வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை டெல்லியில் இருந்து கோவை வந்த இண்டிகோ விமானத்தில் கணக்கில் வராத புதிய ரூபாய் நோட்டுக்கள் கொண்டு வரப்படுவதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்ட போது கென்யா நாட்டை சேர்ந்த கொகுகோ சிஜியோகி சுவெல்டா என்ற பயணியிடம் கட்டுக்கட்டாக இந்திய ரூபாய் நோட்டுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உரிய பதிலளிக்காததால் அவரை வருமான வரித்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சுவெல்டாவிடம் இருந்து 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களையும் 4 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்களையும் பறிமுதல் செய்துள்ள வருமானத்த்துறையினர் இந்த பணம் எவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.