கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள கொடிசியா வளாகத்தில் ஷாப்பிங் திருவிழா இன்று துவங்கப்பட்டது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் திறந்து வைத்தார்.
கொடிசியா வளாகத்தில் துவங்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் மொத்தம் 400-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், கைவினைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், உடைகள், தொழில்நுட்பப் பொருட்கள் என ஏராளமானவை இடம்பெற்றுள்ளன.

இதில், மும்பையைச் சேர்ந்த சரத் மிஸ்ராவின் ஒரு கலைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கலைக் கூடம் 6 ஆண்டுகளாக கொடிசியா வளாகத்தில் நடைபெரும் ஷாப்பிங் திருவிழாவிலும் இடம் பெற்றுவருகிறது. அவரது அரங்கில் மும்பையில் தயாரிக்கப்பட்ட சிறப்பு வளை கூடைகள், சுவர் அலங்காரப் பொருட்கள், சிலைகள் என பல கைவினைப் பொருட்கள் மக்களின் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் உள்ளன.

அக்கண்காட்சியில், யுனிவர்சல் லைட்ஸ் சேர்ந்த மணிகண்டன் அவர்களின் கண்காட்சிப் பொருட்களும் இடம்பெற்றுள்ளன. இவர் இக்கண்காட்சியில் பங்குபெருவது இது இரண்டாவது முறையாகும். இந்த அரங்கில், வண்ண விளக்குகள், அலங்கார விளக்குகள் என ஏராளமானவை உள்ளன. மேலும், மக்களின் விருப்பத்திற்கு தகுந்தவாரும் விளக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. 250 ரூபாய் முதல் 7500 ரூபாய் வரையுள்ள மின்சார சேமிப்பு மின் விளக்கு, எல்இடி விளக்குகள் உள்ளிட்டவை இங்கு அதிகம் விற்பனை செய்யப்படுகிறது.

கோவை ஷாப்பிங் திருவிழாவில் முதன்முறையாக கோயம்புத்தூர் நியாடா கிரியேஷனில் இருந்து ஷீலா மேத்யூஸ் என்பவர் பங்கேற்றுள்ளார். இவரது கண்காட்சி அரங்கில் வீட்டின் அழகை மெருகேற்றும் அலங்காரப் பொருட்கள், சுவற்றில் அழகுக்காக தொங்கவிடப்படும் பொருட்கள், திரைச் சீலைகள் என பலப் பொருட்கள் கண்காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் இடம்பெற்றுள்ளன.
