தமிழக தலைமை செயலாளரின் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அது குறித்து கருத்து கூற முடியாது எனவும் இது குறித்து தமிழக அரசு தான் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்தார். வருமான வரித்துறை ஆய்வு மூலம் மத்திய அரசு மாநில அரசின் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறதா என்பதை இரு அரசுகளும் விளக்க வேண்டும் எனவும் அவர் அப்போது வலியுறுத்தினார்.
மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்து ஆட்சியதிகாரத்தில் அமர்த்தியுள்ளதாகவும் அக்கட்சிக்கு இன்னும் 4 ஆண்டு ஆட்சிக்காலம் இருப்பதால் முதலமைச்சரையும் கட்சிக்கான பொதுச்செயலாளரையும் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அக்கட்சிக்கு உள்ளதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.