அ.தி.மு.கவில் ஜெயலலிதாவை போல தகுதி வாய்ந்த தலைவர்கள் யாருமே இல்லை எனவும் அதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பா.ஜ.க-வால் மட்டுமே நிரப்ப முடியும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்
தில்லியில் கொலை செய்யப்பட்ட மருத்துவர் சரவணன் வீட்டிற்கு செல்வதற்காக கோவை வந்த தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டம் நாராயணபுரத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மூன்று பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பதும், தொடர்ச்சியாக அப்பகுதியில் விபத்துகள் நடப்பதும் சந்தேகத்தினை ஏற்படுத்துவதாக உள்ளது. பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமல் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அடிக்கடி வெடிவிபத்து ஏற்பட்டு வரும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தீக்காய சிறப்பு மருத்துவமனை அமைக்க வேண்டும். இது தொடர்பான கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது.
மேலும், சுனாமியால் காணாமல் போனவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுனாமி நினைவு தினமான இன்று தமிழக முதல்வரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வருமான வரித்துறை சோதனை மூலம் தமிழக அரசை மத்திய அரசு மிரட்டுவதாக சொல்லப்படும் வாதம் தவறானது. ஆதாரங்களின் அடிப்படையிலேயே சோதனைகள் நடத்தப்படுகிறது. தமிழகம் லஞ்ச ஊழலால் புறையோடிக்கிடக்கின்றது. அதை சரி செய்யும் பணியில் மத்திய அரசு உள்ளது.
தமிழகத்தில் இன்று ஏற்பட்டு இருக்கும் அரசியல் வெற்றிடத்தை பா.ஜ.க-வால் மட்டுமே நிரப்ப முடியும். ஜெயலலிதாவிற்கு இணையான தகுதி வாய்ந்த தலைவர்கள் அ.தி.மு.க வில் யாரும் இல்லை. அதனால், அரசியல் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது. பா.ஜ.க தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி மற்றவர்களை மிரட்டி ஆட்சி அமைக்க வேண்டிய அவசியல் பா.ஜ.க-விற்கு இல்லை''. இவ்வாறு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை தெரிவித்தார்.