தமிழக- கேரள எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலையில் கோவைக்கு மேற்கே அமைந்துள்ள சிறுவாணி அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 15 மீட்டர். 22.46 சதுர கிலோமீட்டர் நீர்தேக்க பரப்பு கொண்ட இந்த அணை நிரம்பினால் 283 நாள் வரை தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் பெற முடியும்.
கடந்த 7 ஆண்டாக, சிறுவாணி அணை நீர் இருப்பு குறைவாகவே இருக்கிறது. சிறுவாணி நீரை நம்பி கோவை மாநகராட்சி 22 வழியோர கிராமங்கள் இருக்கிறது. சிறுவாணி அணையில் பருவ மழை காலத்தில்கூட முழு அளவில் குடிநீர் பெற முடியவில்லை.
தற்போது அணையின் நீர் மட்டம் 15 மீட்டர் அளவிற்கு கீழ், 40 செ.மீ வரை சென்று விட்டது. அணை நிலவரம் இறுதிக்கட்ட இருப்பில் உள்ளது.
அணையில் கடைசி வால்வு மூலமாக மேலும் 2 மீட்டர் வரை குடிநீர் பெற முடியும். இந்த நீரை 25 முதல் 30 நாட்களுக்கு வழங்க முடியும்.
சிறுவாணியின் நீர் எடுப்பு நிலையத்தில் 85 ஆண்டிற்கு முன், பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் கட்டிய பழங்கால தடுப்பணை உள்ளது. 12 அடி ஆழம் கொண்ட இந்த தடுப்பணையில் சுமார் 12 கோடி லிட்டர் நீர் தேங்கியுள்ளது. இந்த நீரை உறிஞ்சி எடுக்க வால்வு வசதி கிடையாது. நீர்மூழ்கி மோட்டார் அமைத்து நீரை பம்பிங் ஸ்டேஷனில் உள்ள வால்வு பகுதிக்கு கொண்டு வந்து உறிஞ்சி சுத்திகரித்து நிலையத்திற்கு அனுப்பவேண்டும்.
அணையில் 15 மீட்டர் அளவிற்கு கீழ் குடிநீர் பெற, ஒப்பந்தப்படி கேரள அரசிடம் அனுமதி பெறவேண்டும். தற்போது 15 மீட்டர் அளவிற்கு கீழ் குடிநீர் எடுக்கப்படுகிறது. பழங்கால தடுப்பணையில் குடிநீர் பெற கடந்த 10 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது இந்த நீரை பெற கோவை குடிநீர் வடிகால் வாரியத்தினர் கேரள நீர்பாசன துறையினருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதுவரை அனுமதி உத்தரவு கிடைக்கவில்லை. அனுமதி கிடைத்தால், மோட்டார் அமைத்து மேலும் 15 நாள் குடிநீர் பெற முடியும். எப்படி இருந்தாலும் அதிகபட்சமாக பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் வரை மட்டுமே குடிநீர் வினியோகிக்க முடியும். அதற்கு பிறகு அணையை மூடவேண்டிய அபாயம் ஏற்படும்.
கடந்த 15 ஆண்டு காலத்தில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் அணையின் நீர் தேக்க பகுதியில் அதிகபட்சமாக 100 மி.மீ மழைகூட பெய்யவில்லை. இதுபற்றி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், "அணையில் இருந்து தினமும் 3.9 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. படிப்படியாக குடிநீர் அளவு மேலும் குறையும். அணையில் நீர் மூழ்கி மோட்டார் அமைக்க ஆய்வு நடக்கிறது. 2 மாதம் வரை குடிநீர் தேவையை சமாளிக்க முயற்சி எடுக்கப்படுகிறது" என்றனர்.