பொது சேம நலநிதி கணக்கிற்கு பிடித்தம் செய்து சேர்க்கப்படாத தொகையினை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலைத் துறை கோவை கோட்ட அலுவலகத்தில் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சார்நிலை பணியமைப்பு விதி 35 (a) புறந்தள்ளிடும் போக்கை கைவிட்டு விதிகளை பின்பற்றி முதுநிலை பட்டியலை வெளியிட்டு பதவி வாய்ப்புகள் வழங்கிட வேண்டும். பொது சேம நலநிதி கணக்கிற்கு பிடித்தம் செய்து சேர்க்கப்படாத தொகையினை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
மேலும், விதிமுறைக்கு புறம்பாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உயரதிகாரிகளின் வீட்டு பணி மற்றும் மற்ற பணிகளுக்கு பயன்படுத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்கதினர் 50-க்கும் மேற்பட்டோர் திருச்சி சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறை கோவை கோட்ட அலுவலகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட பணியாளர் சங்க தலைவர் வெள்ளிங்கிரி கூறும்போது, கோரிக்கைகள் குறித்து பலமுறை தமிழக முதலமைச்சர், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், முதன்மை இயக்குநர், கோட்ட பொறியாளர் உள்ளிட்ட பலரிடம் புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தவர்.
தங்களை அழைத்து பேசி தீர்வு காணாவிட்டால் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் மாநிலக் குழுவிடம் ஆலோசித்து அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.