தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது பாரம்பரிய தமிழர் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற மத்திய அரசு அவசர சட்டம் இயற்றக்கோரி, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், ஜல்லிகட்டு மாட்டுடன் வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கக்கோரி முழக்கங்களை எழுப்பினர். மத்திய பா.ஜ.க அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாகவும், கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.