கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (28.12.2016) நொய்யல் ஆறு மற்றும் அதற்குட்பட்ட ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில்:-
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நொய்யல் ஆறு வெள்ளியங்காடு பகுதியிலிருந்து சூலூர் வட்டம் செம்மண்டம்பாளையம் வரை சுமார் 68 கி.மீ தூரம் செல்கின்றது. இது மேலும் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் வழியாக கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியிலிருந்து காவிரி ஆற்றில் இணைகிறது. இதன் மொத்த நீளம் 160 கி.மீ ஆகும். கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பொறுத்த வரை மழைக்காலங்களில் நொய்யல் ஆற்றின் மூலம் 24 ஏரிகளில் தண்ணீர் தேக்கி இப்பகுதியிலுள்ள பொதுமக்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாய பணிகளுக்கு மிகப்பயனுள்ளதாக இருந்து வருகின்றது. இப்பகுதிகளில் கடந்த சில காலங்களாக தனிநபர் ஆக்கிரமிப்புகள் மேற்கொண்டு வருவதை கருத்தில் கொண்டு இவற்றை அகற்ற பயோமெட்ரிக் முறையில் கணக்கெடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு அங்குள்ள நபர்களுக்கு குடிசைமாற்று வாரியத்தின் மூலம் புதிய வீடுகள் கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளன.
அதனால் நொய்யல் ஆறு மற்றும் அதற்குட்பட்ட ஏரிகளின் கரையோரம், கால்வாய் பகுதிகளை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்வது உடனடியாக தவிர்த்திட வேண்டும். மேலும் மாநகராட்சி, கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பு பகுதிகளை உடனடியாக கண்காணிப்பதுடன் பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ், வருவாய் கோட்டாட்சியர் அலுவலர்கள் மதுராந்தாகி, சின்னச்சாமி, கோவை மாநகராட்சி நகர திட்ட அலுவலர், குடிசை மாற்றுவாரிய செயற்பொறியாளர், நொய்யல் ஆறு கோட்ட செயற்பொறியாளர் குமாரசாமி, அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.