பள்ளிப்பருவத்தில் பென்சிலை கொண்டு விதவிதமான கோலங்கள் போட்டு எழுத பழகியிருப்போம். இன்று கருப்பு, அடர்கருப்பு என்ற பல்வேறு விதங்களில் பென்சில்கள் நம் ஊரில் புழங்கிக்கொண்டிருக்க, பென்சில் வளரும் என்ற தகவல் கிடைத்தது. என்ன பென்சில் வளர்கிறதா? என்று உங்களைப் போலவே ஆச்சர்யப்பட்டு, அந்த கேள்விக்கான விடைதேடி புறப்பட்டோம். கோவை காந்திபார்க் பகுதியை அடுத்த பொன்னையா ராஜபுரம் என்ற பகுதியில் தான் இந்த வளரும் பென்சில் தயாரிக்கும் பணி நடக்கிறது.

சீவ சீவ வளருமோ? என்ற பலரின் சந்தேகங்களுக்கு விடையாய் அந்த பென்சில் இருந்தது. பென்சிலின் மேற்பகுதியில் ஒரு கேப்சூல். அதனுள் செடிகள் மற்றும் பூக்களின் விதைகள். பேப்பர் பக்கங்களோடு உராய்ந்து பென்சில் ட்ரை ஆகும் நேரத்தில் கேப்சூல் பகுதியை மண்ணுள் புதைத்து நீர் ஊற்ற அழகான செடிகள் முழைக்கும். என்று சுவாரஸ்யமான தகவலை தந்தார் வளரும் பென்சிலின் தயாரிப்பாளர் ரஞ்சித்குமார்.
பி.இ. கம்ப்யூட்டர் சைன்ஸ் படிப்பை முடித்துவிட்டு மென்பொருள் நிறுவனம் ஒன்றில் ஊழியர்களாக பணியாற்றி வந்த ரஞ்சித் குமாரும், அவரது நண்பர் ராஜ கமலேஷ்-ம் சேர்ந்து உருவாக்கியது தான் ‘பார்ம்சில்’ என்ற இந்த வளரும் பென்சில் தயாரிப்பு நிறுவனம். ‘பார்மர் – பென்சில்’ இந்த இரண்டு வார்த்தைகளின் இணைப்பே பார்ம்சில் என்கிறார் ரஞ்சித்குமார்.
தனது இந்த புதுவிதமான முயற்சி குறித்து ரஞ்சித்குமார் கூறியதாவது :-
படிப்பை முடித்து விட்டு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும்போது, புதுவிதமாக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது அப்போது நானும் எனது நண்பர் ராஜ கமலேஷ் என்பவரும் சேர்ந்து சந்தையில் எங்கும் கிடைத்திராத வகையில் புதிய பொருட்கள் தயாரிப்பது குறித்து யோசனை செய்தோம். அப்போது தான் பார்ம்சில் குறித்த யோசனை கிடைத்தது. இதை தயாரிக்க முடிவு செய்தவுடன் கோவை வேளாண் பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்தோம். பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த நிறுவனத்தை தொடங்கினோம்.

‘பார்ம்சில்’
மாணவர்களை விவசாயம் செய்ய வைக்க வேண்டும் என்றும் அவர்களிடம் விவசாயம் குறித்த ஆர்வத்தை தூண்டும் விதமாக இந்த பென்சிலை வடிவமைக்க வேண்டும் என்ற நோக்கங்களோடு நிறுவனம் செயல்படத்துவங்கியது. இன்று கடைகளில் கிடக்கும் பென்சில்களில் வண்ண சாயம் பூசப்பட்டுள்ளது. அதில் பல ரசாயனங்கள் கலந்துள்ளன. குழந்தைகள் சாதரணமாக பென்சில்களை தங்கள் வாயிற்குள் வைப்பர். அதனால், ரசாயனம் பூச்சு இல்லாமல் பென்சிலை தயாரித்தோம். மரத்தால் தயாரிக்கப்பட்ட இந்த பென்சிலின் மேற்கூரையில் தான் மாணவர்களுக்கான விவசாயப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
கேப்சூல்
பென்சிலின் மேற்பகுதியில் ஒரு கேப்சூல் பொருத்தப்படும். பொதுவாக கேப்சூல்கள் கரையும் தன்மை கொண்டவை. ஒரு சில மாத்திரைகள் கேப்சூளில் இருப்பதை பார்த்திருப்போம். இந்த பென்சிலின் மீது பொருத்தப்பட்டுள்ள கேப்சூல் நச்சுத்தன்மை இல்லாமல் காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படுவது. அதனால் குழந்தைகள் பென்சிலை வாயில் வைத்தாலும் எந்த வித பாதிப்புகளும் ஏற்படாது. ஈரத்தன்மை படும்போது மட்டும் அதில் சிறு சிறு பிசு பிசு தன்மை உண்டாகும். அந்த நேரத்தில் பென்சிலை வாயிற்குள் வைக்கும் பழக்கம் குழந்தைகளிடம் இருந்து மறைந்து போகும்

உறங்கும் விதைகள்
கேப்சூல்களுக்குள் மாணவர்கள் விதைக்க இருக்கும் விதைகள் இருக்கும். எழுதி முடித்த பென்சிலை வீசி விடுவோம். ஆனால், இந்த பென்சில் தீர்ந்த பின்னர், அதில் பொருத்தப்பட்டிருக்கும் விதைகளை மண்ணில் புதைக்கலாம். சில நாட்களில் கேப்சூல் கரைந்து செடிகள் முளைக்கும். 10 விதமான விதைகள் உள்ளது. ஒவ்வொரு பென்சிலிலும் ஒவ்வொரு விதமான விதைகள் இருக்கும். வெண்டைக்காய், தக்காளி, கொத்தவரங்காய், மிளகாய் போன்ற காய்கறி விதைகளும் பூச்செடி விதைகளும் இருக்கும். 8 பென்சில்கள் அடங்கிய ஒரு பெட்டியில் ஒவ்வொரு பென்சிலிலும் வெவ்வேறு விதைகள் இடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு நிச்சயம் பிடித்தமான பென்சிலாக இந்த பார்ம்சில் அமையும். தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போது விற்பனை தொடங்கியுள்ளது. ஒரு பென்சிலை ரூ.10 க்கு விற்பனை செய்து வருகிறோம்.
விரைவில் குழந்தைகள் பயன்பெறும் வகையில் புதிய பொருட்களை தயாரிக்க முடிவு செய்துள்ளோம். பார்ம்சிலை வாங்க (9843343222) இந்த எண்-ஐ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
வளரும் ‘பார்ம்சில்’ மென்மேலும் வளர வாழ்த்துக்கள். ‘விலை-யை மட்டும் கொஞ்சம் கம்மி பண்ணிக்கிங்க பாஸ்.!’