வீரத்தமிழர் முன்னணி சார்பில் ஜல்லிக்கட்டிற்கு தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணி அளவில் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் வீரத்தமிழர் முன்னணி மண்டல பொறுப்பாளர் அருண் ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது.

செய்தியாளர்களிடம் பேசிய அவர்:- தமிழ்நாட்டில் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை தடைசெய்த உச்சநீதி மன்றத்தையும், தனி சட்டம் இயற்றி ஆவணம் செய்யாத மத்திய அரசை கண்டித்தும் வீரத்தமிழர் முன்னணி இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது.தமிழர்கள் 5 ஆயிரம் ஆண்டுகளாக ஏறுதழுவல் என்னும் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தி கொண்டிருக்கிறார்கள். அதை அமெரிக்காவை சேர்ந்த பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்து தடை செய்வது என்பது தமிழர்களின் பண்பாட்டின் இறையாண்மையை மீறும் செயல். 5 ஆண்டுகள் தமிழர்கள் நடத்தும் இந்த போட்டியை தொடர்ந்து 3 ஆண்டுகளாக மத்திய அரசு தடை செய்து வைத்திருக்கிறது. காவிரி உரிமை சிக்கலில் தமிழக அரசுக்கு எதிராக நடக்கும் மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மத்திய அரசு ஜல்லிக்கட்டிற்கு மட்டும் தடை விதிப்பது புறம்பானது.
எனவே நாம் தமிழர் கட்சியும் வீரதமிழர் முன்னணி வருகின்ற தை மாதத்தில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டியை உறுதியாக இந்த மண்ணில் நடத்திக்காட்டுவோம் என்றும் இந்த மண்ணில் எங்கள் காளைகள் ஓடும் என்பதை உறுதியளிக்கிறோம். இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு பின்பாக ஒரு சர்வதேச சாதி இருக்கிறது அதற்கு கூலியாகத்தான் பீட்டா அமைப்பு செயல்படுகிறது. இதனால் தான் மத்திய அரசும் தமிழகத்திற்கு ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதித்துள்ளது. இந்த தடையை நாம் தமிழர் கட்சியும் வீரதமிழர் முன்னணி முறியடிப்போம் இவ்வாறு அவர் கூறினார்.

