50 நாட்களுக்கு மேலாகியும் ரூபாய் தாள்கள் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கோவையில் பிரதமர் மோடிக்கு தூக்கு கயிறு அனுப்ப முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

உயர் மதிப்பு ரூபாய் தாள்கள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், பொதுமக்கள் பழைய ரூபாய் தாள்களை மாற்றவும், புதிய ரூபாய் தாள்களை பெறவும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனிடையே பணப்பிரச்சனைக்கு 50 நாட்களில் தீர்வு ஏற்படாவிட்டால் என்னை தூக்கில் போடுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பணம் மதிப்பிழப்பு வெளியிட்டு 50 நாட்கள் கடந்த நிலையில் பணப்பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மோடிக்கு தூக்கு கயிறு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தூக்கு கயிற்றுடன் திரண்ட அவ்வமைப்பினர், பிரதமர் மோடிக்கு தூக்கு கயிற்றை அனுப்ப முயன்றனர். 90 சதவிகித ஏடிஎம்-கள் மூடப்பட்டு இருப்பதாகவும், திறந்திருக்கும் ஏடிஎம்களிலும் பணம் கிடைப்பதில்லை எனவும், வங்கிகளிலும் போதியளவு பணம் கிடைக்காமல் நாடு முழுவதும் பொதுமக்கள் தவித்து வருவதாகவும், ஆனால் மக்களை பற்றி கவலையில்லாமல் மத்திய அரசு தினந்தினம் புதியபுதிய அறிவிப்புகள் மூலம் மக்களை குழப்பி வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், ஏடிஎம் மற்றும் வங்கிகளில் பணம் எடுக்க காத்திருந்து 60-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் முடக்கம் ஏற்பட்டு இருப்பதால் தொழில் முனைவோரும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறிய அவர்கள், 50 நாட்களுக்குள் பண நெருக்கடிக்கு தீர்வு காணவில்லை எனில் தூக்கில் தொங்குவேன் என அறிவித்திருந்த பிரதமர் மோடிக்கு நினைவூட்டும் வகையில் தூக்கு கயிற்றை அனுப்புவதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, தூக்கு கயிற்றை அனுப்ப முயன்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். பிரதமருக்கு தூக்கு கயிற்றை அனுப்ப முயன்ற சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.