கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் நாட்டு வெடி வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய 4 பேரை கைது செய்துள்ள வனத்துறையினர் அவர்களிடம் இருந்து 6 நாட்டு வெடிக்குண்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நாட்டு வெடிகுண்டு வெடித்து காயமடைந்த காட்டு யானையையும் வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கோவனூர் பாரதிநகர் பகுதியில் அவுட்டுக்காய் என்ற நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி சிலர் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவுட்டுக்காயை கடித்து அது வெடித்ததில் காட்டு யானை படுகாயமடைந்து உணவு உண்ணமுடியாமல் தவித்து வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும் வேட்டையாடுபவர்களை பிடிப்பதற்காகவும் கோவனூர் பகுதியில் இரவு ரோந்துப் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இறந்த காட்டுப்பன்றியின் உடலுடன் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ரங்கராஜ், குருசாமி, குமார் மற்றும் முத்துகுமார் என்ற கூலித் தொழிலாளிகள் என்பதும் அவுட்டுக்காய் என்ற நாட்டு வெடியை பயன்படுத்தி காட்டுப் பன்றியை வேட்டையாடியதும் தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் இருந்து வேட்டையாட பயன்படுத்திய வெடிக்காத 6 நாட்டு வெடிகுண்டுகளும் இருந்தது. அவர்களிடம் இருந்து பன்றி மட்டும் நாட்டு வெடிகளை பறிமுதல் செய்து 4 பேரையும் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் கைது செய்தனர். நாட்டு வெடி வைத்திருந்தது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கபப்பட்டு கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அடிப்பட்ட யானையை வனத்துறையினர் காட்டுப்பகுதிக்குள் தேடி வருகின்றனர். இது போன்று நாட்டு வெடிகளை பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.