நுகர்வோர்கள் பொருட்களை வாங்கும்போது அளவு மற்றும் தரம் பார்த்து வாங்கும் வகையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என ஆட்சியர் தகவல்


நுகர்வோர்கள் பொருட்களை வாங்கும்போது அளவு மற்றும் தரம் பார்த்து வாங்கும் வகையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதுதான் உலக நுகர்வோர் தின விழாவின் நோக்கமாகும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

கோவையில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் உலக நுகர்வோர் தினவிழா 2016-க்கான நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில்,

நாம் அனைவரும் பிறந்தது முதல், வாழும் காலம் தொட்டு, நுகர்வோராக வாழ்ந்து வருகிறோம் என்பதே யதார்த்தமான உண்மை. ஆனாலும் நாம் அனைவரும் எந்த அளவிற்கு நுகர்வியல் குறித்த கல்வி அறிவினைப் பெற்றிருக்கிறோம் என்று பார்த்தால், கடந்த அரை நூற்றாண்டில், நமது நாட்டில் மக்கள் பெரும்பாலானோர் சிறந்த கல்வி அறிவு பெற்றவர்களாகவும், சட்டங்கள் நன்கு அறிந்தவர்களாகவும் மாறி உள்ளமையால், அவர்கள் தற்போது சூழ்நிலையினை தெளிவாக உய்த்துணரக்கூடியவர்களாகவும். உரிமைகளை அதிகாரத்தோடு கேட்பவர்களாகவும், விமர்சிக்க தெரிந்தவர்களாகவும் உள்ளனர்.

நுகர்வோர் என்பவர் பொருட்களையோ அல்லது சேவைகளையோ விலை கொடுத்தோ வாக்குறுதி கொடுத்தோ வாங்குவதை நுகர்வோர் என்கிறோம். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் நாளில் இயற்றப்பட்டது. அந்த தினத்தை தான் தேசிய நுகர்வோர் தினவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் நுகர்வோர் நலன் காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986, இன்று சாமான்யர்களாலும் பயன்படுத்தப்பட்டு நுகர்வோருக்கென்று சிறந்த பாதுகாப்பைத் தந்து கொண்டிருக்கிறது.

பாதுகாப்பு உரிமை, தகவல் பெறும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை, முறையிடும் உரிமை, குறைதீர்க்கும் உரிமை, நுகர்வோர் கல்விக்கென உரிமை, தூய்மையான நலம்பயக்கும் சுற்றுச்சூழலுக்கான உரிமை மற்றும் அடிப்படை தேவைகளுக்கான உரிமை என நுகர்வோர் உரிமைகளாக நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் உரிமைகளைப் போலவே நுகர்வோர்களுக்கென கடமைகளும் உள்ளன. தேவைக்கேற்ற நுகர்வு, தவறு செய்யும் உற்பத்தியாளர்கள், வணிகர்கள் மீது புகார் செய்தல், சுற்றுச்சூழல் குறித்த பொறுப்புணர்ச்சி ஆகிய கடமைகளை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும்.

கலப்படம் என்பது நம்மை ஆட்டிப்படைக்கிறது. ஆம். கலப்படம், கலப்படம் எங்கும் கலப்படம் அதை எடுத்துச் சொன்னாலே புலப்படும் என்ற பாடல் உண்டு. எங்கும், எதிலும் கலப்படம் நீக்கமற நிறைந்திருக்கும் காலம் இது. பாதிக்கப்பட்ட பின் பலன் தேடி என்ன பயன். 'வரும்முன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக்கெடும்" என்கிறார் அய்யன் திருவள்ளுவனார். 

ஆதலால் நுகர்வோராக வாழும் நாம் ஒவ்வொருவரும் நுகர்வியல் கல்வி எனும் வாழ்க்கைக் கல்வியினை அறிந்து நலமாய் வாழ்தல் நலம். ஏமாற்றுவது குற்றம் எனில் ஏமாற்றப்படுவது பெருங்குற்றம் என்பதனை நாம் அனைவரும் அறிதல் வேண்டும். நேர்மையற்ற வணிக நடைமுறையிலிருந்தும், போலி விளம்பரங்களிலிருந்தும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள நுகர்வியல் பற்றிய அறிவும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்த அறிவும் தேவை. அத்தோடு மட்டுமின்றி நுகர்வோராக நாம் நமது கடமைகளையும், பொறுப்புகளையும் உணர்ந்து செயல்படுதலே சாலச்சிறந்தது.

தமிழக அரசால் நடத்தப்படும் மாநில நுகர்வோர் சேவை மையம் நுகர்வோர் பிரச்சனைகளுக்கு மாற்று தீர்வு காணும் முறையில் செயல்பட்டு வருகிறது. நுகர்வோர் இம்மையத்தில் புகார் அளிக்கவும் நுகர்வோர் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை பெறவும் இயலும்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 இயற்றி 25 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில் "27- ஆண்டு கால சாதனைகள்" என்ற கருத்தினை மையமாக கொண்டு இந்த உலக நுகர்வோர் உரிமை தினவிழா கொண்டாடப்படுகின்றது. இன்றைய தினத்தில் அனைவரும் நுகர்வோர்களின் உரிமைகளையும் கடமைகளையும் அறிந்து செயல்படுவோம் என உறுதி எடுத்துக்கொள்வோம் என்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, சிறந்த குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களாக தேர்வு செய்யப்பட்ட நிர்மலா மகளிர் கல்லூரி, ஸ்ரீ ஜெயந்திரா சரஸ்வதி மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பி.எஸ்.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி மற்றும் இரா.செ.அரசு மேனிலைப்பள்ளி ஒன்டிப்புதூர் தேவாங்கர் மேனிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி இடிகரை ஆகிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சரவணமூர்த்தி, மாவட்ட தொழிலாளர் நலத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அலுவலர்கள், குடிமைப்பொருள் தனிவட்டாட்சியர் ஜெகதீசன், ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஆர்.பிரேமலதா, நுகர்வோர் பாதுகாப்பு குழுத்தலைவர் சென்னியப்பன், தமிழ்நாடு நுகர்வோர் நல மையத்தலைவர் ஜார்ஜ், கோவை கன்ஸ்யூமர் செயலாளர் லோகு மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...