அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் அக்கட்சியில் இருந்து விலகியவர்கள் ஜெ-தீபா பேரவை என்ற அமைப்பை துவங்கியுள்ளனர்.
தமிழக முதலமைச்சராகவும், அ.தி.மு.க பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அவரது தோழி சசிகலா அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இதனிடையே சசிகலா தமிழக முதலமைச்சராக பதவியேற்க வேண்டுமென, அக்கட்சி அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க தொண்டர்கள் ஜெ-தீபா பேரவை என்ற அமைப்பை துவக்கி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவையை அடுத்த சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் அ.தி.மு.க தொண்டர்கள் ஜெ-தீபா பேரவை அமைப்பை துவக்கினர். சசிகலா தலைமையை ஏற்க பிடிக்காததால் அ.தி.மு.க வில் இருந்து விலகி இந்த அமைப்பை துவக்கி இருப்பதாகவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டுமெனவும் ஜெ-தீபா பேரவையினர் தெரிவித்தனர்.
அ.தி.மு.க வில் சசிகலா மற்றும் தீபா ஆதரவாளர்கள் இரு பிரிவினராக செயல்பட்டு வருவது, அக்கட்சி தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.