சசிகலாவிற்கு கட்சியில் எந்தவித எதிர்ப்பும் இல்லை என பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.கவின் மூத்த தலைவருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா, முதலமைச்சர் பொறுப்பினை ஏற்க வேண்டும் என நேரில் வலியுறுத்தி உள்ளேன். ஆட்சியும் கட்சி தலைமையும் ஓரே இடத்தில் இருக்க வேண்டும். இதுதான் நடைமுறையாக இருக்கின்றது. சசிகலா முதலமைச்சராக வர வேண்டும் என தனது கருத்தை பதிவு செய்துள்ளேன்.
மேலும், ஜெயலலிதா என்ன செய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டு இருந்தாரோ அதை சசிகலாவால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதால், தொண்டன் என்ற முறையில் சசிகலா ஆட்சிப் பொறுப்பினை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன்.
சசிகலா முதலைமைச்சராவதற்கு கட்சியில் எவ்வித எதிர்ப்பும் இல்லை. தொண்டர்களும் அவர் முதலமைச்சராவதையே விரும்புகின்றனர். சசிகலா முதலைமைச்சர் பொறுப்பினை ஏற்க வேண்டும் என அ.தி.மு.க அமைச்சர்களும், நிர்வாகிகளும் தெரிவிக்கும் கருத்திற்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதில் சொல்ல வேண்டும் என தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் வலியுறுத்தி இருப்பது தொடர்பான கேள்விக்கு, எதிர்கட்சியினர் அப்படித்தான் சொல்லுவார்கள். தி.மு.க ஆட்சிக் காலத்தில் அவரது தந்தையே கட்சி தலைவராகவும், ஆட்சித் தலைவராகவும் இருந்தபோது அது குறித்து கருத்து கூறினார்களா? என எதிர் கேள்வியெழுப்பினார்.
இதேபோல், நாடாளுமன்ற துணை சபாநாயகர் லெட்டர் பேடினை பயன்படுத்தி சசிகலாவிடம் கடிதம் கொடுத்துள்ளது தவறான நடவடிக்கை என்ற சர்ச்சைகள் குறித்தும் தீபா பேரவை துவங்கப்பட்டுள்ளது குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, தம்பிதுரை பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர் சொந்த வேலையாக வந்துள்ளதாகவும் இன்று இரவே அவர் மீண்டும் சென்னை திரும்புவதாகவும் அ.தி.மு.க வினர் தெரிவித்தனர்.