கோவை மாவட்டத்தின் நீராதாரங்களை பாதுகாக்க கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோவை மாவட்ட குழுவின் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மனுவில், மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி பாய்ந்தோடும் நொய்யல் நதியானது. கோவை மாவட்டத்தில் வெள்ளியங்கிரி மலையருகே துவங்கி கோவை, திருப்பூர் மாவட்டங்கள் வழியாக சென்று கரூர் மாவட்டம் நொய்யலில் காவிரியுடன் கலக்கிறது. மழைக்காலங்களில் வெள்ளமாய்ப் பாய்ந்தோடும் நொய்யல், வழியெங்கும் உள்ள குளங்களை நிரப்புகிறது. கோவை மாவட்டத்திற்கு இது முக்கிய நீராதாரமாகும். நொய்யலின் இன்றைய நிலை வேதனைக்குரியது. ஆக்கிரமிப்புகளும், சாக்கடை மற்றும் சாயக்கழிவுகளும் நொய்யலை சிதைத்துவிட்டன. மேலும் கல்கொத்தி மலைப் பகுதியிலிருந்து முண்டந்துறைக்கு கல்வாய்க்கால் வழியே தண்ணீர் வராமல் கேரள அதிகாரிகள் தடுத்துள்ளதாகவும், இது தொடர்பாக தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர் தடையின்றி வந்துசேர ஓணம்புழா மண் வாய்க்கால் திட்டம் பத்தாண்டுகளுக்கு முன்பே வகுக்கப்பட்டும் இதுவரை நிறைவேற்றப்படாதது. கண்டிக்கத்தக்கதாகும்.
எனவே, கோவை மக்களின் உயிர்ப் பிரச்னையாகிய இதில் உடனடி நடவடிக்கை எடுக்க, நொய்யல் நீராதாரத்தைப் பாதுகாக்க கல்கொத்தி மலை ஓணம்புழா மண்வாய்க்கால் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நொய்யல் மற்றும் குளம், குட்டை, வாரி போன்ற நீர்நிலைப் புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும். சீமைக் கருவேல மரங்களை அகற்றவும், மக்களுக்கு பயன்தரக்கூடிய பாரங்களை வளர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோவை மாவட்ட குழுவின் தலைவர் கல்யாணசுந்தரம், செயலாளர் வசந்தகுமார், மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோவை மாவட்ட குழுவின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.