கோவை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களாக காட்டூர், சரவணம்பட்டி, சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான இருசக்கர வாகனத்திருட்டு தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. இதில், குற்றவாளியைப் பிடிப்பதில் காவல் துறையினர் மத்தியில் தாமதம் ஏற்பட்டு வந்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சமீபத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் உணவு விடுதி ஒன்றில் இருசக்கர வாகனத் திருட்டு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சாய்பாபா காலனி காவல் துறையினர் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரித்தனர்.
இதில், வாகனத் திருட்டில் ஈடுபட்டவரின் முகம் தெரிந்ததைத் தொடர்த்து, திருட்டில் ஈடுபட்டவரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவரது பெயர் முகமது ரஃபீக் (43) என்பதும், துடியலூரில் செல்போன் கடை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
செல்போன் கடையில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக வாகனத்திருட்டில் ஈடுபட்டதாகவும், அதனை 1000, 500 ரூபாய்க்கு விற்று மது அருந்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, திருடப்பட்ட 5 இருசக்கர வாகனங்களை மீட்ட காவல் துறையினர், தொடர்ந்து மேலும் இவரால் இதுபோல் வேறு வாகனங்கள் திருடப்பட்டுள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.