கோவை மாவட்டம், சூலூர் அருகே நடுப்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் தனியார் நூற்பாலை நடத்திவருகிறார். இவரது நூற்பாலைக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அஸ்ஸாமைச் சேர்ந்த சிராஜுதீன் மகன் அப்துல் ஜாபர் (21) என்பவர் இந்து என்ற பெண்ணுடன் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அப்போது, அப்துல் ஜாபர் அந்த இளம்பெண்ணை தனது னைவி என்றும் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளனர்.
இவர்கள் இருவரும் நூற்பாலையின் அறையில் தங்கியிருந்த நிலையில், திங்களன்று காலை இருவரும் பணிக்கு வராததால் பணியாளர் ஒருவர் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றுள்ளார்.
அப்போது, இந்து துப்பட்டாவில் கழுத்தை இறுக்கி கொல்லப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்ட பணியாளர் நூற்பாலையின் உரிமையாளர் செல்வராஜிடம் இந்து பிணமாகக் கிடப்பதை கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சூலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கருமத்தம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அங்கு வந்த சூலூர் காவல் துறையினர் மற்றும் தடய அறிவியல் துறை நிபுணர்கள் அப்துல் ஜாபர், இந்து தங்கியிருந்த அறையில் சோதனை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக இந்துவின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, தலைமறைவான அப்துல் ஜாபரை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில், இன்று அப்துல் ஜாபரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த இளம் பெண் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா தேவி (22) என தெரியவந்துள்ளது.
மேலும், சித்ரா தேவிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதும், கணவனை மற்றும் குழந்தைகளை பிரிந்து கோவையில் கடந்த 4 மாதமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
அப்துல் ஜாபர் காவல் துறையினரிடம் கூறுகையில், கணவனைப் பிரிந்து தன்னுடன் வாழ்ந்து வந்த சித்ரா தேவி தொடர்ந்து என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தி வந்தார். அதனால் நேற்று இரவு சுமார் 3 மணியளவில் அவரது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு தப்பிவிட்டேன் என கூறியுள்ளார்.
இதனிடையே, காவல் துறையினர் அப்துல் ஜாபரை இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவர் என தகவல் வெளியாகியுள்ளது.