தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின் போது இடையூராக உள்ள மரங்களை வெட்ட பொது ஏலம் விடாமல் தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விட்ட தேசிய நெடுஞ்சாலை துறையைக் கண்டித்து கோவை மாவட்ட மர வியாபாரிகள் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை- பொள்ளாச்சி இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலை தற்போது நான்கு வழி சாலையாக மாற்ற சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விரிவாக்கப் பணிக்காக சாலை ஓரங்களில் இடையூறாக உள்ள மரங்கள் வெட்டப்பட்டது. அதேப்போல் கோவை ஈச்சனாரி- பொள்ளாச்சி ஆச்சிபட்டி வரை உள்ள சுமார் 1714 அரச மரம், ஆலமரம் , புளியமரம், வாகை மரங்கள் உள்ளிட்டவற்றை வெட்ட வேண்டியுள்ளதால் அவற்றின் மதிப்பை வனத்துறையினரிடம் ஆலோசனை மேற்கொண்ட பின் பொது ஏலத்தில் விடப்படும் என கோவை மாவட்ட மர வியாபாரிகள் எதிர்பார்த்து வந்த நிலையில் இந்த டெண்டர் ஏற்கனவே ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த மரம் வெட்டும் பணியை பொது ஏலத்தில் விட்டால் ஒரு கோடி வரை ஏலம் போகும். ஆனால், தனியார் நிறுவனத்திற்கு ஏலம் விட்டதன் மூலம் அரசிற்கு 75 லட்சம் வரை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் சாலை விரிவாக்க ஒப்பந்தத்தோடு மரம் வெட்டி விற்பனை செய்ய ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளித்ததாகவும் கோவை மாவட்ட மர வியாபாரிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மட்டும் மர வியாபாரத்தை நம்பியே 250-க்கும் மேற்பட்ட மர வியாபாரிகள் உள்ளதாகவும், பொது ஏலம் விடாமல் தனியாருக்கு கொடுத்து அரசு வருவாய் இழப்புடன், வியாபாரிகளையும் கடுமையாக பாதிப்படையச் செய்யும் இச்செயலைக் கண்டித்து கோவை திருச்சி சாலை கோத்தாரி லேஅவுட் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மரவியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த பிரச்சனை குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.