அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை என குற்றம்சாட்டி 500-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக கோட்ட அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை கோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமார் 5 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மாதத்திற்கான ஓய்வூதியம் இதுவரை அவர்களுக்கு வழங்கப்படாத நிலையில் இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது ஓய்வூதியத்திற்கான தொகை இதுவரை வழங்கப்படவில்லை என பதில் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 500 -க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்ட தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அதன் வாயிலின் முன்பாக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள் ஓய்வூதிய திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும், உடனடியாக ஓய்வூதியம் வழங்காதபட்சத்தில் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.