கோவையில் வரும் 7-ம் தேதி மதியம் 2 மணியளவில் இஸ்கான் ஸ்ரீ ஜெகநாத் ரகு ஊர்வலம் நடைபெற இருப்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி சாலை மார்க்கமாக உக்கடம் வரும் வாகனங்கள் சுங்கம் அல்லது பேரூர் பைபாஸ் சாலைகளை மாற்று பாதைகளாக உபயோகிக்கலாம்.
அவிநாசி சாலையில் உள்ள பழைய மேம்பாலத்திலிருந்தும், லங்கா கார்னரிலிருந்தும் பாலக்காடு ரோடு செல்லும் அனைத்து இலகுரக வாகனங்களும் பெரியகடைவீதி மற்றும் வின்சென்ட் ரோடு மார்க்கமாக உக்கடம் பகுதியை சென்றடையலாம். பின்னர் அங்கிருந்து, மற்ற இடங்களுக்கு செல்லலாம்.
பேருந்துகள் வழக்கம் போல் டவுன்ஹால் வழியாக உக்கடம் செல்லலாம். ஆனால், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதி மற்றும் ஒப்பணக்காரவீதி ஆகிய பகுதிகளுக்கு செல்ல அனுமதியில்லை.
அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்திலிருந்து தடாகம் ரோடு மற்றும் மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் சுக்கிரவார்பேட்டை வழியாக காந்திபார்க் அல்லது பூமார்க்கெட் வழியாக செல்லலாம்.
தடாகம் சாலையிலிருந்து பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் பொன்னையராஜபுரம், சொக்கம்புதுார், ராமமூர்த்தி ரோடு வழியாக சிவாலயா தியேட்டர், பேரூர் பைபாஸ் ரோடு, உக்கடம் வழியாக செல்லலாம்.
பேரூரிலிருந்து செட்டி வீதி, ராஜ வீதி வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், சிவாலயா சந்திப்பு பேரூர் பைபாஸ் சாலை மார்க்கமாக உக்கடம் அடைந்து அல்லது சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி ரோடு, சொக்கம்புதுார், பொன்னையராஜபுரம், காந்திபார்க் அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
ஆர்.ஜி., வீதி மற்றும் வைசியால் வீதிக்கு, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை லாரி போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. மேலும், ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி.வீதி ஆகிய சாலைகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை எந்த வாகனங்களும் நிறுத்தக்கூடாது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.