கோவை கிழக்கு மண்டலம் வீரியம்பாளையம் பகுதியில் 34வது வார்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1954ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஊராட்சி ஒன்றியம் தொடக்க பள்ளியாக செயல்பட்டு 2002ம் ஆண்டு முதல் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இப்பள்ளி 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்படுகிறது. இங்கு 192 மாணவர்கள் பயிலுகின்றனர். ஆசிரியர்கள் 9 பேர் உள்ளனர்.
ஆனால் இந்த பள்ளி வளர்ச்சிக்கு தேவையான எந்த வசதிகளையும் மாநகராட்சி செய்து கொடுக்க அலட்சியப்படுத்துகிறது. மாறாக இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் முயற்சியில் பள்ளிக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்களின் சாதனைகளால் இப்பள்ளிக்கு பல்வேறு விருதுகளும் பாராட்டுக்களும் கிடைக்கிறது. பல்வேறு சிறப்புக்கள் இப்பள்ளிக்கு இருந்துமே ஆனால் அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளது. 65 வருடங்களான பழைய கட்டிடங்களிலும் பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

உடைந்த ஓடுகளால் இப்பள்ளியில் மழைக்காலங்களில் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இப்படிப்பட்ட பள்ளிகளிலிருந்து திறமைமிக்க மாணவர்கள் உருவாகின்றனர். ஆனால் அவர்களுக்கு ஏற்ற வசதிகளை செய்து கொடுக்க முடியாமல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அலட்சியப்படுத்தி வருகிறது.

சிறுசேமிப்புத் திட்டம்:
இங்கு மாணவர்களுக்கு பள்ளியில் சிறுசேமிப்பு திட்டம் மாணவர்களால் நடத்தப்படுகிறது. பள்ளியில் ஒரு சிறிய அறையில் இந்த பள்ளி வங்கி செயல்படுகிறது. பள்ளி மாணவர்கள் மதியம் உணவு இடைவேளையில் இந்த பள்ளி வங்கியை உபயோகிக்கின்றனர். மாணவர்கள் தங்கள் சேமிப்பு பணமான ரூபாய் 5 முதல் 100 வரை வசூலிக்கப்படுகிறது. வங்கியில் நடைபெறும் முறையை போல் மாணவர்களுக்கு பாஸ் புக் வழங்கப்பட்டும், பணத்தை டெபாசிட் செய்வதற்கான படிவம் வழங்கப்படும் வங்கியை போன்ற நடத்தப்படுகிறது. எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் என 4 பேர் வாங்கி மேலாளர் போன்றும், வாங்கி அதிகாரிகளும் போல செயல்பட்டு பள்ளி மாணவர்களிடம் பெறப்படும் சிறுதொகையை வாரத்திற்கு ஒருமுறை பள்ளி அருகில் உள்ள காளப்பட்டி சாலையில் உள்ள அலகாபாத் வங்கியில் செலுத்தி வருகின்றனர். இதில் மாணவர்கள் ரூபாய் 500 வரை சேமித்த பிறகு அவர்களுக்கு வங்கியில் தனி கணக்கு துவங்குவதற்கும் ஏற்பாடு செய்து தருகின்றனர். இதன் மூலம் மாணவர்கள் தங்கள் பள்ளி படிப்பை முடித்தவுடன் பெரிய அளவில் இந்த சிறுசேமிப்பு திட்டம் உதவியாக இருந்து வருகிறது.

பள்ளியில் இயற்கைத் தோட்டம்:
அதேபோல், பள்ளியில் ஒருபகுதியில் இடம் ஒதுக்கப்பட்டு மாணவர்களுக்கு இயற்கை தோட்டம் அமைத்து பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. இயற்கை தோட்டம் அமைக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டும், ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் இயற்கை தோட்டம் முறையை பற்றியும் பாடம் பயிலுகின்றனர். இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் இந்த இயற்கை தோட்டம் பற்றி எளிதில் புரிந்து கொள்கின்றனர். மேலும் இந்த இயற்கை தோட்டத்தின் மூலம் வெண்டை, கத்திரி, தக்காளி போன்ற பல்வேறு காய்கறிகளை பெறப்படும் அவற்றை மதிய உணவிற்கு சேமித்தும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வருகிறது.

முன்னாள் மாணவர்களின் சேவை:
இப்பள்ளியைச் சுற்றி பாதுகாப்பு சுவர் இல்லாமலும் இருந்தது, அதனை முன்னாள் மாணவர்கள் இணைந்து அவர்களது செலவில் பள்ளிக்கு பாதுகாப்பு சுவரை கட்டி கொடுத்தனர். அதேபோல் மழைக்காலங்களில் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவதால், பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படும். இதனை சரி செய்வதற்கு பள்ளி வளாகத்தில் மணல் கொட்டப்பட்டும் அதனை சரி செய்துள்ளனர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு மேசை, ஆசிரியர்களுக்கு நாற்காலி போன்றவற்றை பள்ளி முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து செய்து கொடுத்துள்ளனர்.

மேலும், இப்பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானம், நூலகம் மற்றும் அறிவியல் கூடம் போன்றவற்றை மாணவர்களுக்கு தேவையாக உள்ளது. இதுபோன்ற மாநகராட்சி பள்ளிகள் கோவையில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றது. ஆனால் போதிய வசதிகள் இல்லாமலும் பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர். இதுபோன்ற பள்ளிகளுக்கு முன்னாள் மாணவர்களும், தொண்டு நிறுவனங்களும் தான் உதவிகள் செய்து வருகின்றது. ஆனால் மாநகராட்சியும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவதில்லை. இதனால் மாநகராட்சி பள்ளிகளில் தரமும் உயராமல் இருந்து வருகிறது.