ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை நடத்தி சசிகலா முடிவு செய்வார் என தமிழக நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 30-வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக-வினர் அஞ்சலி ஊர்வலங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை அதிமுக அணி சார்பில் ஆத்துபாலத்தில் இருந்து குறிச்சி வரை மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.
தொடர்ந்து குறிச்சியில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்திய அதிமுகவினர், கட்சி தலைமைக்கு ஆதரவு தெரிவித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட அதிமுக தற்போது சட்டமன்றத்தில் தனிப்பெருன்பான்மையுடன் உள்ளதாகவும், இதனால் மத்திய அரசு தமிழக அரசை அச்சுறுத்தி விட முடியாது எனவும் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா போட்டியிடுவாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், மூத்த நிர்வாகிகளை கொண்ட கட்சியின் உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை நடத்தி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சசிகலா முடிவு செய்வார் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
இந்த மவுன அஞ்சலி ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.