தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 181 காலிப்பணியிடங்களை நிரப்பிடும்பொருட்டு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் இருந்து 36 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தநிலையில், பல்வேறு கட்டத் தேர்வுகளுக்குப் பின் அதில் 905 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கான உடற்தகுதித் தேர்வு சென்னை அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் 2016 டிசம்பர் அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அப்போது ஏற்பட்ட வர்தா புயலின் காரணமாக அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அந்த உடற்தகுதித் தேர்வு கோவை மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்றது. தமிழக வனத்துறைக்கென கோவையில் உடற்தகுதித் தேர்வு நடைபெற்றது இதுவே முதன்முறையாகும்.

இந்த உடற்தகுதித் தேர்வில் ஆண்களுக்கு 25 கிலோ மீட்டர் ஓட்டப்போட்டியும், பெண்களுக்கு 16 கிலோ மீட்டர் ஓட்டப் போட்டியும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு உடற்தகுதி ஆய்வு செய்யப்பட்டது.
இதுகுறித்து, தமிழ்நாடு வனத்துறை பணிநியமன ஆணையத் தலைவர் பி.ஜெகதீஷ் நமது நிருபரிடம் கூறுகையில், முன்னதாக மண்டல அளவில் வனத்துறை காலிப்பணியிடத்திற்கான தேர்வு நடைபெற்று வந்தது. பின், இதனை ஒருங்கிணைத்து நடத்த 2012-ம் ஆண்டு இந்த பணிநியமன ஆணையம் உருவாக்கப்பட்டது. 2015-யில் வனத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் பெறப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இத்தேர்வு நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்றுள்ள உடற்தகுதித் தேர்வில் 905 விண்ணப்பதாரர்கள் பங்கேற்றுள்ளனர், அதில், 270 பேர் பெண்களாவர்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழக வனத்துறை முழு பணிப்பாதுகாப்பு உள்ள துறையாகும். மக்களுக்கு இதுகுறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனாலேயே தற்போது ஏராளமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களிலும் இளைஞர்கள், பெண்கள் இதில் அதிகமாக பங்கேற்று தேர்வு பெற வேண்டும்" என்றார்.