பொள்ளாச்சியை சேர்ந்த செந்தில்குமார் என்ற வாலிபர் கடந்த அக்டோபர் மாதம் கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக வந்த வேளாண் கல்லூரி பேராசிரியர் ஒருவரிடம் பணம் எடுத்து தருவதாகக் கூறி அவரது ஏடிஎம் அட்டையை மோசடி செய்து பறித்துள்ளார்.
மேலும், அவருக்கு போலி அட்டையை கொடுத்தனுப்பிய அந்த வாலிபர் பேராசிரியரின் கணக்கிலிருந்து 35 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட கோவை காட்டூர் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் பிரியா மாலினி, செந்தில்குமாரை கைது செய்தார். தொடர்ந்து, அவரது வீட்டில் சோதனை செய்து சுமார் ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளார்.
ஆனால், காவல்துறை பதிவேட்டில் குறைந்த மதிப்பிலான தொகை மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட வாலிபர் செந்தில்குமாரின் உறவினர் அளித்த தகவலின் பேரில் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நடத்திய விசாரணையில் பெண் காவல் ஆய்வாளர் பிரியா மாலினி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கமளிக்க வலியுறுத்தியுள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.