மத்திய அரசு கடந்த 2016 நவம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதனால் இந்தியா முழுவதும் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி அமைப்பினர், பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு கொள்கையை கண்டித்து எல்ஐசி காப்பீட்டு ஊழியர்கள் கோவை திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி தலைமை அலுவலக வாளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பில் இது வரை சரியான தீர்வு கிடைக்காததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர்கள், பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது முதல் பெட்ரோல் பங்க், வங்கிகள், தனியார் நிறுவனங்களில் பழைய நோட்டுகள் வாங்க மத்திய அரசு அனுமதி அளித்தது, ஆனால் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி காப்பீட்டு நிறுவனத்தில் பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என அறிவுறுத்தியது.
இதனால் எல்.ஐ.சி நிறுவனத்தில் உள்ள 30 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல்.ஐ.சி ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.