கேரள மாநிலம் பாலக்காட்டில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் கோவையிலிருந்து கேரளாவிற்கு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லவில்லை.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற பா.ஜ.க பிரமுகர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையை கண்டித்து பா.ஜ.க சார்பில் பாலக்காடு மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி அங்கு இன்று காலை 6 மணி முதல் முழு அடைப்பு போராட்டம் துவங்கியுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் வாகனங்கள் எல்லைப்பகுதியான வாளையாறில் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் அனைத்து கேரள மாநில பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் உக்கடம் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு எல்லைப்பகுதியான கோவை வழியாக நாள்தோறும் பால், முட்டை, இறைச்சி, காய்கறிகள் என ஏராளமான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. முக்கிய பாதையான பாலக்காட்டில் நடைபெற்று வரும் முழு அடைப்பு காரணமாக இந்த பொருட்கள் எல்லைப்பகுதியில் தேங்கியுள்ளது குறிப்பிடதக்கது.