வால்பாறையில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நள்ளிரவில் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளையும், பள்ளி சத்துணவுக்கூடம், நியாயவிலைக் கடைகள் மற்றும் டீக்கடை, மளிகைக் கடை ஆகியவற்றை சேதப்படுத்தி வருகிறது.
வால்பாறையை அடுத்துள்ள பழைய வால்பாறை எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்து அங்கிருந்த வீடுகளின் கதவுகளை உடைத்து பாத்திரங்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தியது. இன்று அதிகாலை ஸ்டேன்மோர் எஸ்டேட்டில் உள்ள சிந்தாமணி ரேஷன் கடையை உடைத்து 1 மூட்டை அரிசி மற்றும் பொருட்களை நாசம் செய்தது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டு யானைகளை காட்டுப்பகுதிக்குள் விரட்டினர்.

இதே போல் வால்பாறை அருகே உள்ள உருளிக்கல், தாய்முடி, ஈட்டியார், புதுத்தோட்டம் ஆகிய பகுதிகளில் யானைகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளது. பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். வனவிலங்குகளிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசு மின்வேலிகள் அமைத்தும் அகழிகளை வெட்டியும் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.