கோவை வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள சி.எம்.சி காலனியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இப்பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகின்றது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெரைட்டி ஹால் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது மாநகராட்சி நிர்வாகம் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்குவதாகவும், அதுவும் இரவு நேரத்தில் மட்டுமே வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இந்தபகுதியில் பெரும்பாலும் மாநகராட்சி துப்புரவுபணியாளர்களே வசிக்கும் நிலையில் குடிதண்ணீர் கூடகிடைக்காமல் அவதிப்படும் நிலை இருப்பதாகவும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இன்று மாலைக்குள் குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். குடிநீருக்காக பொதுமக்கள் நடத்திய போராட்டம் காரணமாக வெரைட்டி ஹால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.