தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டம், பேரணி, உண்ணாவிரதம் உள்ளிட்டு பல்வேறுகட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இதனிடையே, கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளையதலைமுறை என்னும் தன்னார்வ அமைப்பினர் 10 பேர், கோவை வ.ஊ.சி மைதானத்தில் இன்று "நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன்" "I Support Jallikattu" போன்ற வாசகங்கள் அடங்கிய பலகைகளை கையில் ஏந்தியவாறு அமர்ந்தனர்.

இதைக்கண்ட அப்பகுதியில் இருந்தோர் தாங்களும் ஜல்லிக்கட்டுக்கு விருப்பத்தை தெரிவிப்பதாகக் கூறி சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் யாரும் அழைக்காமல் அமர்ந்து ஆதரவு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவிநாசி சாலையில் பேரணியில் ஈடுபட்டனர். பின், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அனுமதியின்றி இதுபோன்ற பேரணியில் ஈடுபடக் கூடாது என கூறியதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்துசென்றனர்.

இதுகுறித்து, இளையதலைமுறை தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோகுல், நமது நிருபரிடம் கூறுகையில், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீரவிளையாட்டு. பல்வேறு காரணங்களுக்கு இதற்கு அரசாங்கமும், நீதிமன்றமும் தடை விதித்து வருகிறது. வரும் பொங்களன்றும் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்பில்லை. மக்கள், நாமாக ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டினை நடத்தி பாரம்பரியத்தை நிலைநாட்ட வேண்டும்" இவ்வாறு கூறினார்.