கோவை மாவட்டம் வறட்சியால் பாதிக்கப்பட்ட மதுக்கரை, தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், அன்னூர், சர்க்கார்சாமக்குளம், சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி (வடக்கு), பொள்ளாச்சி (தெற்கு), ஆனைமலை ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அரசு முதன்மை செயலாளருமான ஹர்மந்தர்சிங் தலைமையில் தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆகியோர் முன்னிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர் சேதங்கள் குறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் தெரிவிக்கையில்,
தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர் சேதங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் பத்து ஆண்டுகளில் சராசரி மழையளவு 671 மி.மீ ஆகும். கடந்த 2016ம் ஆண்டில் 223.0மி.மீ மழையளவுதான் பெய்துள்ளது. இது சராசரி மழையளவை விட 67.5 சதவிகிதம் குறைவாகும்.
2016ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் சராசரி மழையான 333.3 மி.மீ-க்கு 109.1 மி.மீ மழையளவுதான் பெய்துள்ளது. இதில் சராசரி மழையளவை விட 67.3 சதவிகிதம் குறைவானதாகும்.
குறைவாக பெய்துள்ள மழையின் காரணமாக 2016-ஆம் ஆண்டு மழை பருவத்தில் விதைக்கப்பட்ட மானாவாரி சோளம் 9869 ஹெக்டரில் தோராயமாக 8230 ஹெக்டர் பரப்பும், மக்காசோளம் பயிராகியுள்ள 2916 ஹெக்டரில் தோராயமாக 1665 ஹெக்டர் பரப்பும், பயிறு வகைப்பயிர்களில் சாகுபடி ஆகியுள்ள 4662 ஹெக்டரில் 2200 ஹெக்டர் பரப்பளவும் 50 சதவிகிதத்திற்கு கூடுதலாக வறட்சியினால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இது கடந்த 140 ஆண்டகளுக்கு பின் ஏற்பட்ட வறட்சியாகும்.
கோவை மாவட்டத்திலுள்ள 295 கிராமங்களில் 276 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் விவசாய பயிர்களை முழுவதும் கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொண்டு 100 சதவிகிதம் வறட்சி நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், நடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நாகராஜன், சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள், பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன்.கே.அர்ஜூனன், ஓ.கே.சின்னராஜ், கே.கனகராஜ், எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, மாவட்ட வருவாய் அலுவலர் தா.கிறிஸ்துராஜ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன், பயிற்சி ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் ரூபன் சங்கர்ராஜா, வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, வேளாண் இணை இயக்குநர் சந்தரசேகரன், துணை இயக்குநர் இக்பால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்ராஜ் சாமுவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.