தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்யக்கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சிறை கதவுகளுக்கு பின்னர் கைவிலங்கு அணிந்து இருப்பது போல நூதன முறையில் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு அவ்வமைப்பினர் சிறைவாசிகளின் நிலையை சித்தரிக்கும் வகையில் சிறை கதவுகளுக்குள் இருப்பது போல சித்தரிக்கும் வகையில், சிறை கதவுகளுடன் கைவிலங்கு அணிந்தபடி வந்தனர்.
கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆயுள் தண்டனை கைதிகள் பத்து ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுவதாகவும், ஆனால் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கைதிகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி வருவதாகவும் த.பெ.தி.க-வினர் குற்றம் சாட்டினர்.
கடந்த காலங்களில் தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டது போல, பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமெனவும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரரிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
சிறை கதவுடன் கைவிலங்கிட்டபடி மனு அளிக்க வந்தவர்களால் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.