கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் கோவை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில்:- "கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களான 100 வார்டு பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சியிலுள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் எல்லா பகுதிகளுக்கும் சமமாக 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் குடிநீர் வாகனங்களையும் மேலும் கூடுதலாக அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பில்லூர் நீர் ஆதாரங்களிலிருந்து பெறப்படும் குடிநீர், சிறுவாணி குடிநீர் நீர் ஆதாரங்களின் பகுதிகளுக்கு செல்லும் வகையில் குழாய்களுக்கு இணைப்பு பணி முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சியிலுள்ள அனைத்து வார்டு பகுதிகளுக்கும் குடிநீர் பங்கிடப்பட்டு சமமாக பிரித்து விநியோகம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பருவ மழை இல்லாத காரணத்தினால் குறிப்பாக சிறுவாணி, பில்லூர் மற்றும் இதர நீர் ஆதாரங்களில் குடிநீர் வழக்கத்தைவிட சற்று குறைவாக உள்ளதாலும் பொதுமக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் குடிநீரை பொது மக்களுக்கு சீரான முறையிலும் விநியோகிக்க வேண்டும்.
அதேபோல கோவை மாநகராட்சியிலுள்ள குடிநீர் குழாய்கள் பழுது ஏற்பட்டால் அதனை உடனடியாக சரிசெய்யவும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஏற்கனவே குடிநீர் சம்பந்தமாக அமைக்கப்பட்ட குழு, வாரம் ஒரு முறை கூடி ஆய்வுக் கூட்டம் நடத்தி மாநகராட்சி ஆணையருக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் அறிக்கை சமர்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகரப் பொறியாளர் ராஜேந்திரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆலோசகர் சம்பத்குமார், செயற்பொறியாளர் சுகுமார், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் ஞானவேல், பார்வதி, உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.